Headlines
Loading...
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 35 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கான வாய்ப்பு

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் 35 மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கான வாய்ப்பு



இம்முறை வெளியான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைவாக அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் இருந்து சுமார் 35 இற்கு மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதிக்கான வாய்ப்புள்ளதாக அதிபர் ஏ.எல்.கமறுதீன் தெரிவித்தார்.

வர்த்தகப் பிரிவில் பரீட்சைக்குத் தோற்றிய நான்கு மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் "A" தர சித்தி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளதுடன் அம்மாணவர்கள் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

எஸ்.ஏ. றஜா அஹமட், ஜே.எம்.ஜுமான், எம்.எச்.சப்ரீனா, ரீ.முஜீஸா ஆகிய மாணவர்கள் வர்த்தப் பிரிவில் அனைத்துப் பாடங்களிலும் "A" தர சித்தியினைப் பெற்று பல்கலைக்கழக அனுமதி பெறவுள்ளனர்.

இப்பாடசாலையில் இம்முறை பல்கலைக்கழக அனுமதி பெறுவோரில் சுமார் பத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கணித விஞ்ஞானப் பிரிவில் பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் தகுதியினைப் பெற்றுள்ளனர். கணித விஞ்ஞானப் பிரிவில் தோற்றிய சுமார் 90 சத வீதத்திற்கு அதிகமான மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் சித்தி பெற்றுள்ளனர்.

கடந்த வருடம் இப்பாடசாலையில் கணித விஞ்ஞான, கலை, வர்த்தக, தொழில்நுட்ப பீடங்களிலிருந்து எட்டு மாணவர்களே பல்கலைக்கழக அனுமதி பெற்றதாகவும் இம்முறை இப்பாடசாலையில் இருந்து பல்கலைக்கழகம் செல்வதற்கான அனுமதியினை பெருந்தொகையான மாணவர்கள் பெற்றிருப்பது பாடசாலைக்கு பெருமை சேர்க்கின்றது என குறிப்பிட்ட கல்லூரியின் அதிபர் ஏ.எல்.கமறுதீன் இப்பெறுபேறுகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணர்களையும், கற்பித்த ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பாடசாலைச் சமூகத்தினர் போன்றோருக்கு தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் மேலும் தெரிவிப்பதாக குறிப்பிட்டார்.

இதேவேளை இம்முறை மருத்துவ மற்றும் பொறியியல் துறைகளுக்காக அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை, ஒலுவில் மற்றும் பாலமுனை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களுள் சிலர் எமது பாடசாலையில் கல்வி கற்ற பழைய மாணவர்கள் என்றும் அம்மாணவர்கள் தற்போது எமது பாடசாலைக்கு வருகை தந்து கற்பித்த ஆசிரியர்களுக்கும் அதிபருக்கும் நன்றியறிதலை தெரிவித்து வருவதாகவும் அதிபர் ஏ.எல்.கமறுதீன் தெரிவித்தார்.