இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள ஐவருக்கு தலா 2 மில்லியன் நிதி : நளின் பண்டார



(எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்)


அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு நாட்டில் பாரிய நிதி நெருக்கடி நிலவுகின்ற சூழ்நிலையில் அரசாங்கம் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக இராஜாங்க அமைச்சுக்களை பொறுப்பேற்றுள்ள ஐவருக்கு தலா 2 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் நளின் பண்டார சபையில் தெரிவித்தார்.


பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (19) உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு அரசாங்கம் மாத சம்பளம் வழங்கியது என்பதை ஆரம்பத்தில் கேள்விப்பட்டோம் ஆனால் தற்போது வாகன பாவனை குறித்தும் விடயங்கள் வெளியாகியுள்ளதை அவதானிக்க முடிகிறது.


புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து எரிபொருளின் விலை சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த அரசாங்கத்தில் 2 ரூபாவினால் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்ட போது தற்போதைய ஆளும் தரப்பினர் அப்போது துவிச்சக்கர வண்டியில் பாராளுமன்றிற்கு வருகை தந்தார்கள். தற்போது எம்மால் துவிச்சக்கர வண்டியில் செல்ல முடியாத நிலைமை தோற்றம் பெற்றுள்ளது.


மருத்துவ கட்டமைப்பில் பாரிய மருந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருந்து தட்டுப்பாட்டின் காரணமாக நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.


நாட்டு மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக பாரிய நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் தனது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு சுயாதீனமாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.


நாட்டில் நிதி நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில் நேற்று இராஜாங்க அமைச்சு பதவிகளை பொறுப்பேற்றவர்களில் ஐவருக்கு தலா 2 மில்லியன் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளது என்பதை பொறுப்புடன் குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.