புதிய அமைச்சரவை நியமனம் – ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முறுகல்?



ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


அரசாங்கக் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி உறுப்பினர்களிடையே பல வாரங்களாக கடுமையான அரசியல் ஸ்திரமின்மை நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.


அவர்களில் பலர் தற்போது எதிர்க்கட்சியில் அமர்ந்து 11 உறுப்பினர்களைக் கொண்ட கூட்டணியுடன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.


மேலும் அண்மைய அமைச்சரவை நியமனங்கள் மற்றும் அரச அமைச்சு நியமனங்கள் அனைத்தும் ஜனாதிபதியின் தெரிவினால் மாத்திரமே இடம்பெற்றதாகவும், பிரதமருடன் கலந்தாலோசிக்கப்படவில்லை என்றும் பதவிப் பிரமாண நிகழ்வுகளில் அவர் கலந்துகொள்ளவில்லை எனவும் சிரேஷ்ட அரசியல் வட்டாரங்கள் தெரிவிப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சில மூத்த அமைச்சர்களை அமைச்சரவையில் இணைக்குமாறு பிரதமர் அழைப்பு விடுத்ததாகவும் ஆனால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, எதிர்ப்பாளர்களை அமைதிப்படுத்தி நாட்டை மீட்பு பாதையில் கொண்டுவரும் என எதிர்பார்த்து இளைய மற்றும் புதிய அமைச்சரவையை நியமித்தமையால் முறுகல் நிலை ஏற்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.