காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரசாத் சற்றுமுன் கைது.


காலிமுகத்திடல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் டான் பிரசாத் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.


கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் மற்றும் அலரிமாளிகைக்கு அருகாமையில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) விசுவாசியான டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.


 நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பாக வாக்குமூலங்களைப் பதிவு செய்த பின்னர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.


 அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அலரிமாளிகையில் சந்தித்ததைத் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் விசுவாசிகள் பலரிடையே அவர் காணப்பட்டார்.


 ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, மிலன் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் உட்பட பல ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் விசுவாசிகளை கைது செய்யுமாறு சிஐடிக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்த நிலையில், போதுமான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டதை அடுத்து டான் பிரியசாத் கைது செய்யப்பட்டுள்ளார்.


 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த மற்றும் மிலன் ஜயதிலக்க ஆகியோர் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் வாக்குமூலம் பதிவு செய்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் நேற்று 10 மணித்தியாலங்களுக்கு மேல் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் தாக்குதல்கள் தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்தார்.