இந்திய நிவாரணப் பொருட்களை வழங்குவதில் ஜீவன் அழுத்தம் எனக் குற்றச்சாட்டு


இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்துள்ள மக்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக, தமிழக அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருள்களை பகிர்ந்தளிப்பதில் அரசியல்வாதியொருவரின் அழுத்தம் அதிகரித்துள்ளதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார்.


பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான் இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

கண்டியில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.


இந்த நிவாரணப் பொருள்களை ஜீவன் தொண்டமான் குறிப்பிடும் நபர்களுக்கு வழங்குமாறு அழுத்தம் பிரயோகிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எனினும் இந்தக் குற்றச்சாட்டை ஜீவன் தொண்டமான் எம்.பியின் பிரத்தியேக செயலாளர் மறுத்துள்ளார். இவை அனைத்தும் அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.