கத்தார் கிரிக்கெட் அணி தலைவராக தேர்வானார் இலங்கை வீரர்


கத்தார் கிரிக்கெட் அணியின் தலைவராக இலங்கையைச் சேர்ந்த றிஸ்லான் இக்பார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இவர் அந்த அணியின் உப தலைவராக இருந்தார்.


இலங்கையின் கண்டி மாவட்டம் கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தைச் சேர்ந்த றிஸ்லான் (37). கட்டுகஸ்தோட்ட புனித அந்தோனியார் கல்லூரியின் ((St. Anthony’s College) முன்னாள் மாணவர்.


இவர் பாடசாலை கிரிக்கெட் அணி, கண்டி மாவட்ட அணி, மத்திய மாகாண அணிக்காவும் விளையாடியுள்ளார்.


2003-04 காலப்பகுதியில் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இலங்கையின் தேசிய அணியிலும் விளையாடியுள்ளார்.


தற்போது, கத்தாரில் உள்ள றிஸ்லானுடன் தொடர்பு கொண்டு பேசியபோது, 'தொழில் வாய்ப்புப் பெற்று 2006 ஆம் ஆண்டு கத்தார் சென்று, நண்பர் ஒருவரின் உதவியுடன் பிரபல உள்ளுர் கிரிக்கெட் அணியொன்றில் விளையாடும் வாய்ப்பை பெற்றதாக.' கூறினார்.


மேலும், 'கத்தார் தேசிய அணியில் 2010ஆம் ஆண்டு தொடக்கம் விளையாடி வருவதாகவும், 2016ஆம் ஆண்டு அணியின் உப தலைவராக தான் நியமிக்கப்பட்டதாகவும்.' தெரிவித்தார்.


மொத்தம் 18 வீரர்களைக் கொண்டுள்ள கத்தார் கிரிக்கெட் அணியில் 06 இலங்கையர்களும், 04 இந்தியர்களும், 08 பாகிஸ்தானியர்களும் உள்ளனர்.