இஸ்லாத்தை அவமதித்து பேசியமை தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கேட்க தயார் - சட்டத்தரணியூடாக ஞானசார தேரர் அறிவிப்பு

( எம்.எப்.எம்.பஸீர்)


இஸ்லாம் ஒரு புற்று நோய் என ஞானசார தேரர்

வெளியிட்ட கருத்துக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


இன்று (01) வெள்ளிக்கிழமை 0குறித்த வழக்கின் சாட்சி விசாரணைகளும், அவ்வழக்கில் பகிரங்க மன்னிப்பு கோர ஞானசார தேரர் சார்பில் முன் வைக்கப்பட்ட கோரிக்கையும் பரிசீலனைச் செய்யப்படவிருந்தது.


இந் நிலையிலேயே நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு, நீதிச் சேவைகள் ஆணைக் குழுவினால் கடந்த 27 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்று நிருபத்துக்கு அமைய இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாமலேயே எதிர்வரும் ஆகஸ்ட் 26 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.


கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் பொரளை ஜும் ஆ பள்ளிவாசலின் நிர்வாக சபை உருப்பினர் ரிகாஸ் ஹாஜியார் முன் வைத்த முறைப்பாட்டுக்கு அமைய, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் மேலதிக நீதிவான் (3 ஆம் இலக்க அறை) முன்னிலையில் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கில் கடந்த ஜூன் 8 ஆம் திகதி சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி முறைப்பாட்டாளர் தரப்பின் முதல் சாட்சியாளர் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்.


இவ்வாறான நிலையில், குறித்த வழக்கை சுமுகமாக முடித்துக்கொள்ளும் நோக்கில் தனது சேவை பெறுநர் நீதிமன்றில் பகிரங்க மன்னிப்பு கோர தயாராக இருப்பதாக ஞானசார தேரரின் சட்டத்தரணிகள் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.


இந் நிலையில் இது குறித்த விவகார வழக்கு இன்று  ஜூலை முதலாம் திகதி மீள விசாரணைக்கு  எடுக்கப்படவிருந்தமை குறிப்பிடத்தக்கது.